சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்வதற்கு தினமும் 25,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினசரி 2,000 பக்தர்களுக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் 3,000 பக்தர்களுக்கும், மகர விளக்கு தரிசனத்துக்காக 5,000 பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
மகர விளக்கு பூஜைகள் முடிந்த பிறகு மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததால், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, கடந்த சில மாதங்களாக மாதாந்திர பூஜைகளின்போது தினசரி 15,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகர விளக்கு ஜோதி விழா அடுத்த மாதம் 16ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி பக்தர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (அக்டோபர் 7) கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடந்தது.
இதையடுத்து முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மண்டல கால பூஜையின்போது, தரிசனத்துக்காக தினந்தோறும் 25,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். தேவைப்பட்டால் வரும் நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும். இங்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
10 வயதுக்குட்பட்ட மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட பெண் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் கொண்டு செல்லும் நெய், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும். தரிசனம் முடிந்த உடன் பக்தர்கள் பம்பைக்குத் திரும்பிச் சென்றுவிட வேண்டும்.
சந்நிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை. எருமேலியில் இருந்து பெருவழிப்பாதையில் நடந்து சபரிமலை செல்லவும் அனுமதி இல்லை.
சொந்த வாகனங்களில் வருபவர்கள், நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்திவிட்டு கே.எஸ்.ஆர்.டி.சி அரசுப் பேருந்தில் பம்பா செல்ல வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.
கடந்த ஆண்டு பம்பா நதியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு, நதிக்கரையிலேயே ஷவர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்தாண்டு பம்பா நதியில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,