qதீபாவளி: பேருந்து, ரயில், விமானம் முற்றுகை!

Published On:

| By Balaji

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையிலிருந்து 5,774 பஸ்களில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 152 பேர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு சென்றனர்.

தீபாவளி பண்டிகை நாளை (27.10.2019) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டத்தினர் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதை கருத்தில்கொண்டு கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம், மாதவரம் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் தற்காலிக வெளியூர் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் (அக்டோபர் 24) சென்னையில் இருந்து 2,968 பஸ்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 343 பேர் பயணம் செய்துள்ளனர். நேற்று (அக்டோபர் 25) இரவு 9 மணி வரையில் சென்னையிலிருந்து 2,806 பஸ்களில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 809 பேர் பயணம் செய்துள்ளனர். ஆக மொத்தம் 5,774 பஸ்களில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 152 பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து இன்று (அக்டோபர் 26) 1,510 சிறப்பு பஸ்கள் புறப்படுகின்றன. கோயம்பேட்டில் ஏற்கெனவே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் வேளையில் சிறப்பு பஸ்கள் இயக்கத்தால் கோயம்பேடு பகுதியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக செல்லக்கூடிய அரசு மற்றும் சிறப்பு பஸ்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் ‘ஆம்னி’ பஸ்களில் பயணம் செய்வதால் ஆம்னி பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது.

பஸ் போக்குவரத்தைக் காட்டிலும் ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம்பிடிக்க பயணிகளிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பல பயணிகள் ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி அபாயகரமான முறையில் பயணம் செய்ததைக் காண முடிந்தது.

தீபாவளிக்குச் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பலர் பஸ், ரயில்களில் பயணப்பட இயலாமல் விமானத்தில் பயணம் செய்கின்றனர். இதனால் விமானக் கட்டணமும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share