கடந்த சில நாட்களாக தங்க நகைகள் விற்பனை மந்தமாக இருந்த நிலையில் தீபாவளிக்கு 30 டன் தங்க நகைகள் நாடு முழுவதும் விற்கப்பட்டுள்ளது, வியாபாரிகளுக்கு இன்ப தீபாவளி பரிசாக அமைந்தது.
தீபாவளிக்கு முந்தைய நாளை ‘தன்தேரஸ்’ என வட மாநிலங்களில் கொண்டாடுவர். இந்துக்கள் மருத்துவ கடவுளாகக் கருதப்படும் தன்வந்திரியை அன்று வழிபடுவர். இந்த தன்தேரஸ் நாளில் மட்டும் நாடு முழுவதும் 30 டன் தங்க நகைகள் விற்பனையாகி உள்ளது.
இதுகுறித்து தேசிய தங்க நகை விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலர் சுரேந்திர மேத்தா, “கடந்த சில ஆண்டுகளாக தீபாவளியை ஒட்டி 40 டன் வரை தங்க நகைகள் விற்பனையானது. தற்போது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அத்துடன் மக்களிடையே பணப் புழக்கமும் குறைந்துள்ளது.
இதனால் இந்த ஆண்டு 20 டன் தங்க நகைகள் மட்டுமே விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சில நாட்களாகவே மந்தமாக இருந்த நிலையில் தன்தேரஸ் தினத்தில் மட்டும் ஒரே நாளில் 30 டன் தங்க நகைகள் விற்பனையாகி உள்ளது. இது இன்ப அதிர்ச்சியாக உள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டைவிட விற்பனை 25 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்தாண்டு 10 கிராம் தங்கம் 31,702 ரூபாயாக இருந்தது. அதுவே தற்போது 38,275 ரூபாயாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
�,