வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் பங்கு பெற்ற பெண்களின் படத்தை பிரபல அமெரிக்க இதழான டைம் அட்டைப்படமாக வெளியிட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
டெல்லியின் எல்லை பகுதியான திக்ரி, காஜிபூர், சிங்கு எல்லைகளில் டிராக்டர்களை வீடுகளாக மாற்றி தங்கி போராட்டத்தில் இருந்து பின்வாங்காமல் கடும், குளிர், மழை, வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டக் களத்திலிருந்து திரும்புவோம் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர். ஆங்காங்கே இருந்தபடியே சமைத்து சாப்பிட்டு போராடி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் நேற்று (மார்ச் 5) 100ஆவது நாளை எட்டியுள்ளது. போராட்டக் களத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் பிரபல அமெரிக்க இதழான ‘டைம்’ பத்திரிகையின் மார்ச் மாதத்துக்கான இதழின் அட்டைப்படத்தில் டெல்லி திக்ரி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களின் படம் இடம்பெற்றுள்ளது. விவசாயிகள் போராட்டத்தின் முன்னணி வீரர்கள் என குறிப்பிடப்பட்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது.
போராட்டத்தில் பெண்கள் பங்குபெற வேண்டாம் என்கிற உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களைக் குறித்து டைம் இதழ் இந்த அட்டைப்படத்தை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
**- ராஜ்**
�,