�
ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வருகிற 25ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி நடந்து வருகிறது. ‘முக்கிய மந்திரி கர் கர் ரேஷன் யோஜனா’ என்ற பெயரில் ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின்படி, டெல்லியில் உள்ள மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே சென்று விநியோகம் செய்யப்படும். இதனால் வயது முதிர்ந்தோர், உடல்நலம் குன்றியோரின் அலைச்சல் தவிர்க்கப்படுவதுடன், வெயிலில் வரிசையில் நிற்பது, காலவிரயம் போன்றவை தவிர்க்கப்படும்.
இதுகுறித்து உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் இம்ரான் உசைன் கூறும்போது, “டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வருகிற 25ஆம் தேதி ‘முக்கிய மந்திரி கர் கர் ரேஷன் யோஜனா’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
இதன்படி, சீமாபுரி வட்டத்தில் உள்ள 100 வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிற வட்டங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.
**-ராஜ்**
�,