பண மதிப்பிழப்பு விவகாரத்தால் வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் (FMCG) விற்பனை கடந்த சில மாதங்களாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான தயாரிப்புச் செலவும் அதிகரித்துள்ளதால் வரும் மாதங்களில் இந்த நுகர்பொருட்களின் விலையை உயர்த்தவிருப்பதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதாவது பிஸ்கட், ஐஸ்கிரீம், சோப்பு வகைகள் போன்ற அன்றாடம் தேவைப்படும் பொருட்களின் விலை உயரவுள்ளது.
தயாரிப்பு மூலப் பொருட்களான சர்க்கரை, பால் பவுடர், பாமாயில் ஆகியவற்றின் விலை கடந்த ஆண்டில் மட்டும் 20 முதல் 80 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பிரிட்டானியா, டாபர், அமுல், பார்லே ஆகிய நிறுவனங்கள் தங்களது தயாரிப்புப் பொருட்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளன. பிரிட்டானியா நிறுவனம் தனது பிஸ்கெட்டுகளின் விலையை 5 சதவிகிதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதேபோல, சான்தூர் சோப் தயாரிப்பு நிறுவனமான விப்ரோ கன்சியூமர் கேர், சோப்புகளின் விலையை 7 சதவிகிதமும், அமுல் நிறுவனம் தனது உணவுப் பொருட்களின் விலையை 8 சதவிகிதமும் உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
இதுகுறித்து பிரிட்டானியா நிறுவன நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி கூறுகையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும்விதமாக 6 முதல் 7 சதவிகிதம் வரை விற்பனை விலையை உயர்த்தவுள்ளதாகக் கூறினார். டாபர், பார்லி, நிறுவனங்களை பொருத்தவரை, தயாரிப்பு பொருட்களின் விலையை அதிகரிக்கவோ அல்லது பாக்கெட்டுகளின் எடையை குறைக்க உள்ளன. பார்லி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய தயாரிப்புகளின் விலையை 8 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளது. அதேபோல, தங்களது தயாரிப்புகளின் அளவுகளையும் குறைத்துள்ளது.�,