கோவை குற்றாலம்,பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலாத் தலங்களுக்கு செப்டம்பர் 6ஆம் தேதிமுதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம்தான் முதலிடத்தில் உள்ளது. அதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மக்கள் அதிகமாக கூடும் இடங்களான வர்த்தக பகுதிகளில் பால், மருந்தகம், காய்கறிக் கடைகள்,மளிகைக் கடைகள் தவிர மற்ற கடைகள் சனி, ஞாயிற்று கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று உணவகங்கள், பேக்கரிகள் மாலை 6 மணிவரை மட்டுமே இயங்க வேண்டும் என்றும், வார இறுதி நாட்களில் துணி மற்றும் நகைக் கடைகள் இயங்கவும் தடை விதித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா காரணமாக பூச்சமரத்தூர், கோவை குற்றாலம் ஆகிய சூழல் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், கோவை சுற்றுலாத் தலங்கள் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” செப்டம்பர் 6ஆம் தேதி முதல் சுற்றுலா தலங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை குற்றாலத்துக்கு வர விரும்புவோர், [அதற்கான](https://coimbatorewilderness.com) இணையதளத்தில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கோவை குற்றாலத்துக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் நுழைவுக் கட்டணம் செலுத்தும் முன்பு வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகடிவ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
இங்கு வரும் பயணிகள் 4 குழுக்களாக உள்ளே அனுப்பப்படுவார்கள். காலை 9 மணி முதல் 9.30 மணி வரை, காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 1.30 மணி முதல் 2.00 மணி வரை தலா 150 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.
காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட பூச்சிமரத்தூர் சூழல் சுற்றுலாப் பகுதியில் உள்ள மூன்று தங்கும் விடுதிகளில் விடுதிக்கு 4 பேர் வீதம் ஒரு நாளைக்கு 12 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,”