கொரோனா: இரண்டாம் கட்டத்தில் இந்தியத் தடுப்பு மருந்து!

Published On:

| By Balaji

ஒன்றிய அரசின் உயிரியல் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் கண்டுபிடிக்கப்பட்ட சைகோவி-டி (ZyCoV-D) எனப்படும் கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்துக்கான மருத்துவப் பரிசோதனை முதலாம்/இரண்டாம் கட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தகவல் வெளியிட்டிருக்கிறது.

உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவிக் குழுவினால் (பிஐஆர்ஏசி) நடைமுறைப்படுத்தப்படும் தேசிய உயிரி மருந்தாளுமை திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின், உயிரியல் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சைகோவி-டி (ZyCoV-D) எனப்படும் இந்த பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பு மருந்து சைடஸ் என்ற நிறுவனத்தால் வடிவமைத்து, தயாரிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை இதற்கான பகுதி நிதி உதவி அளித்துள்ளது. இந்தத் தடுப்பு மருந்து ஆரோக்கியமான மனிதர்களுக்குச் செலுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனைகளின் முதலாவது, இரண்டாவது கட்டப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று பிஐஆர்ஏசி அறிவித்துள்ளது. இந்தியாவில் மனிதர்களுக்குச் செலுத்தப்படவுள்ள, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது கொரோனா தடுப்பு மருந்து இது என்றும் பிஐஆர்ஏசி அறிவித்துள்ளது.

தடுப்பு மருந்து கொடுக்கப்படும் அளவை அதிகரிப்பது; பலமுனை ஆய்வுகளை மேற்கொள்வது போன்றவற்றை உள்ளடக்கிய முதலாவது, இரண்டாவது கட்டப் பரிசோதனை மூலம் இந்தத் தடுப்பு மருந்தின் பாதுகாப்பு; இது செலுத்தப்பட்டவர்களுக்கு இதை தாங்குகின்ற தன்மை; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை ஆகியவை குறித்து மதிப்பிடப்படும்.

இதுகுறித்து ஒன்றிய உயிரி தொழில்நுட்பத் துறையின் செயலரும் பிஐஆர்ஏசி அமைப்பின் தலைவருமான டாக்டர் ரேணு ஸ்வரூப், “தேசிய உயிரி மருந்தாளுமை இயக்கத்தின் கீழ் கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே விரைந்து தயாரிப்பது என்பதற்காக, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை சைடஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. பல கோடிக்கணக்கான மக்களை அபாயகரமான சூழலில் வைத்துள்ள இந்தப் பயங்கரமான பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்காக தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில்கொண்டு சைடஸ் நிறுவனத்துடன் கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற ஆராய்ச்சி முயற்சிகள் தற்போதைய தொற்றுக்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற தொற்று வர நேரிட்டால், அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியவும், நாட்டுக்கு உதவும். சமுதாயத்துக்கு மிகவும் தேவையான, உண்மையான மாற்றங்களைக் கொண்டுவரும் வகையிலான புதிய பொருட்களைக் கண்டறியும் புதுமைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான சூழலை உருவாக்க வேண்டும் என்ற அரசின் எண்ணத்துக்கு எடுத்துக்காட்டாகவும் இது அமைகிறது” என்று கூறினார்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share