கொரோனா நபர்கள் குறித்து 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம்!

Published On:

| By Balaji

கொரோனா நபர்கள், சந்தேகப்படும்படியாக நடக்கும் நபர்கள் குறித்து பொதுமக்கள் 24 மணி நேரமும் தன்னிடம் தகவல் தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அருளரசு கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ஈரோடு மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன், நாமக்கல் மாவட்ட புதிய காவல் துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பு ஏற்றுக்கொண்டதும் நிருபர்களிடம் பேசும்போது,

“தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது. மேற்கு மண்டலத்தைப் பொறுத்தவரையில் கொரோனா தொற்று பரவுதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முன்கள வரிசையில் பணியாற்றும் போலீஸாரும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். கடந்த 100 நாட்களைத் தாண்டி போலீஸார் தன்னார்வத்துடன் பணியாற்றி வந்தாலும், அவர்களுக்கு ஊக்கம் தேவைப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பு பாதுகாப்புப் பணி முடிவில்லாத பணி போல இருந்து வருகிறது.

இதே காலகட்டத்தில் குற்ற சம்பவங்களைத் தடுத்தல், சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல் போன்றவற்றையும் செய்ய வேண்டியுள்ளது. இதை ஒரு குழுவாகத் தான் செய்ய முடியும். கொரோனாவின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த இ-பாஸ் வாங்கி வரும் நபர்களை முறையாக கண்காணிக்க வேண்டும்.

பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வெளியே வந்தால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

குற்ற சம்பவங்களை குறைய கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் கொரோனா நபர்கள், சந்தேக நபர்களைக் கண்டால் 24 மணி நேரமும் என்னிடம் தகவல் தெரிவிக்கலாம். அது சரியான தகவலா, இல்லை தவறானதா என்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். கொரோனா தடுப்புப் பணியைப் பொறுத்தவரையில் பிற மாவட்டங்களில் இருந்து தேவையின்றி வருவதை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடரும்” என்று அவர் கூறினார்.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share