60 வயதுக்கு மேற்பட்டவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்த வேண்டாம்!

Published On:

| By Balaji

60 வயதுக்கு மேற்பட்ட நபர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று மதுரை மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவுதலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் மின்னல் வேகத்தில் மதுரையில் கொரோனா பரவி வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் 20ஆம் தேதியில் இருந்து தினமும் 250-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதிப்பு அதிகமாக இருந்தாலும், இறப்பு விகிதம் மதுரை மாவட்டத்தில் 2.6 சதவிகிதமாக உள்ளது. சர்க்கரை நோய், இதய நோய், நுரையீரல் பிரச்சினை போன்ற நோய் இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதேபோல் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மரணம் அடையும் வாய்ப்பு மற்றவர்களைவிட அதிகமாக உள்ளது. இதைத்தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களை எந்த விழாவுக்கும் அழைக்கக் கூடாது. அவர்களை எந்தப் பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று மாவட்டகலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் அனைத்துத் துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோருக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார்.

அதில் அவர், “அனைத்துத் துறை அலுவலகங்கள் மூலம் நடைபெறும் அரசு விழாக்கள், நிகழ்ச்சிகள் ஏதேனும் அத்தியாவசியம் கருதி நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த விழாவுக்குக் கீழ்கண்ட வகையினரை அழைக்கக் கூடாது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்டோர், நோய் உள்ளோர், கர்ப்பிணிகள், 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள். இந்தப் பிரிவைச் சேர்ந்த எவருக்கேனும் பயன்கள் அளிக்க வேண்டி இருந்தால், அந்தப் பயன்களை அவர்களது வீட்டுக்கே சென்று வழங்க வேண்டும்.

மேலும் அரசு துறை அலுவலகங்களில் காண்டிராக்ட்டு அல்லது ஒப்பந்தம் மூலம் பணிபுரியும் காவலர், துப்புரவுப் பணியாளர்கள் போன்ற 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்குப் பணி வழங்கக் கூடாது. அவர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும். 60 வயதுக்குட்பட்ட உள்ள நபர்களை மட்டுமே இந்தப் பணிகளுக்குப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share