கடந்த 2020ஆம் ஆண்டில் சீனா நாட்டின் நகரத்திலிருந்து கொரோனா பெருந்தொற்று முதன் முதலில் தோன்றியது. பின்னர் அது உலகமெங்கும் பரவி அனைவரின் இயல்பு வாழ்க்கையையும் பாதித்தது. கடந்த இரண்டு வருடங்களாக உலகமே கொரோனாவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், தற்போதுதான் கொரோனா பரவல் சற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் உலகின் பல இடங்களில் கொரோனா பரவல் ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. இந்தியாவிலும் மூன்றாவது அலைக்கு பிறகு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், தற்பொழுது படிப்படியாக மீண்டும் உயர்ந்து வருகிறது.
இதற்கிடையே சீனா நாடு ஜீரோ கோவிட் முறையை அமல்படுத்தி கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் சீனாவில் உள்ள பீஜிங் மற்றும் ஷாங்காயில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் இந்த இரண்டு நகரங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன.
இந்நிலையில் பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற கொரோனா பரிசோதனையில் பீஜிங்கில் 29 பேரும், ஷாங்காயில் 11 பேரும் என சீனாவில் மொத்தம் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பீஜிங்கில் உள்ள பிரபல மதுபான விடுதியில் இருந்து பல பேருக்கு கொரோனா பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஷாங்காய் நகரில் ஒரு அழகு நிலையம் மூலம் கொரோனா தொற்று பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
.