sஅரியர் வைத்தவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Published On:

| By Balaji

கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிரப் பிற பருவப் பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்திக் காத்திருக்கும் மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகக் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 23ஆம் தேதி உத்தரவிட்டார்.  இந்த உத்தரவில், பருவத் தேர்வு நடத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட உயர் மட்ட குழு பரிந்துரையின் பேரில்,

முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கும் (Bachelor Degree Arts and Scince),

பாலிடெக்னிக் பட்டயப் படிப்பு (Polytechnic Diploma) பயிலும் மாணவர்களுக்கும்

முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், (Master Degree First Year)

இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் (BE)

முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், (ME)

அதேபோன்று, எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்

இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்விலிருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதி  வழங்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 26)  வெளியிட்ட அறிவிப்பில், “மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிரப் பிற பருவப் பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்திக் காத்திருக்கும் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இதுகுறித்து விரிவான ஒரு அரசாணையை வெளியிட உயர் கல்வித்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

**-கவிபிரியா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share