சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த யஸ்பால் என்பவர், 2017ஆம் ஆண்டு முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். தற்போது சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் யஸ்பால் கழிவறைக்கு சென்றுள்ளார். அவர் உள்ளே சென்ற சிறிது நேரத்திலேயே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.
உடனே தூய்மை பணியாளா் ஓடிச்சென்று பார்த்தபோது, யஸ்பால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விமானநிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமானநிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்று, கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் பணியில் சேர்ந்த நிலையில், இன்று தற்கொலை செய்துக் கொண்டார்.
இவரது தற்கொலைக்கு மன உளைச்சலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஒடிசாவிலிருந்து சேலம் வரவழைக்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் ஆஷிஷ் குமார் பாட்டியா(30) தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**