சென்னையில் தொடரும் மழை : செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு!

Published On:

| By Balaji

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 2 மணிக்குத் திறக்கப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்தும் சென்னையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியில் 23அடியை நெருங்கியதால் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஏரியிலிருந்து அடையாறு ஆற்றில் முதல்கட்டமாக 500 கன அடி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் பகுதிகளான சிறு களத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம் பதிவேடு திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தங்கும் படியும் மேலும் உபரி நீர் திறந்து விடும்போது பொதுமக்கள் கரையோரம் கூட்டமாகச் சென்று வேடிக்கை பார்க்கக்கூடாது எனவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நவம்பர் 25 ஆம் தேதியிலிருந்து மூன்றாவது முறையாக இன்று செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்படுகிறது.

இதுபோன்று கனமழையின் காரணமாகப் புழல் ஏரியிலிருந்து இன்று மதியம் ஒரு மணி அளவில் 500 கன அடி நீர் முதல்கட்டமாகத் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share