பேருந்துகள் நிறுத்தம்: சென்னை மக்களுக்கு உதவும் மெட்ரோ!

Published On:

| By Balaji

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் கடந்த இரண்டு நாட்களாக நீடித்துவரும் நிலையில் சென்னை மக்களின் தினசரி அலுவல்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் பெரிதும் உதவி வருகிறது.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக சென்னையில் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,700 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வந்த நிலையில் போராட்டம் காரணமாக 1,400 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

வழக்கமான பஸ் சேவை இல்லாததால் மின்சார ரயில்களில் பலர் பயணம் செய்தனர். அத்துடன் தற்போது மெட்ரோ ரயில் சேவை சென்னையில் 54 கி.மீ தூரத்திற்கு முழுமையாக இயக்கப்படுவதால் சென்னை நகரவாசிகளுக்கு பெரிதும் உதவுகிறது.

சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, விமான நிலையம், வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், விம்கோ நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மெட்ரோ ரயில் உள்ளடக்குவால் நேற்று வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்தது.

வழக்கத்தைவிட 30 சதவிகிதம் பேர் அதிகமாக பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஐந்து நிமிடத்துக்கு ஒரு சேவை என்ற அடிப்படையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் சென்னை மக்களுக்கு மெட்ரோ ரயில் மாற்று போக்குவரத்து மையமாக திகழ்ந்தது.

சென்னையில் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையிலும், குறிப்பாக வட சென்னையை மத்திய, தெற்கு சென்னையோடு இணைக்கும் வகையில் சேவை இருப்பதால் பெரும்பாலானவர்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் செல்வோருக்கு உதவிடும் வகையில் காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் 5 நிமிடத்துக்கு ஒரு சேவை இயக்கப்படுகிறது. கூட்டம் நெரிசல் அல்லாத நேரத்தில் தேவைப்பட்டால் சேவையை அதிகரிக்கவும் திட்டமிட்டு இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இனிவரும் காலங்களில் சாலை போக்குவரத்து தடைப்பட்டாலும் அதற்கு மாற்றாக சென்னையில் எந்த பாதிப்பும் இல்லாமல் மெட்ரோ ரயில் சேவை நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், முன்பு மின்சார ரயில் சேவையை மட்டுமே சார்ந்து இருந்த நிலையில் தற்போது கூடுதலாக மெட்ரோ ரயில் சேவையும் சென்னை

மக்களுக்குப் பெரிதும் உதவுகிறது என்றும் மெட்ரோவில் பயணிக்கும் பலர் கூறுகிறார்கள். மேலும், மெட்ரோ ரயில் டிக்கெட் விலை ஓரளவு குறைந்துள்ளதும் ஒரு காரணம் என்கிறார்கள்.

அன்றாட பணிகள் தடைபடாமல் தொடர்ந்திட மெட்ரோ ரயில் சேவை புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் எதிர்வரும் காலங்களில் மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share