கிருஷ்ணா நதி நீர்: சென்னை குடிநீர் ஏரிகளில் 90 சதவிகிதம் தண்ணீர்!

public

கிருஷ்ணா நதி நீர் வரத்தால் சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு 90 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த ஐந்து ஏரிகளிலும் மொத்தம் 11.757 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த நிலையில் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று காலை பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 575 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இந்த இரண்டு ஏரிகளிலும் நீர் இருப்பு 90 சதவிகிதம் உள்ளது. இதனால் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது. சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதாலும், கிருஷ்ணா நதிநீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாலும் இந்த ஆண்டு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.300 டிஎம்சி. இதில் 3.058 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 92.6 சதவிகிதம் ஆகும். ஏரிக்கு விநாடிக்கு 150 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. விநாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டிஎம்சி. இதில் 3.276 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 90 சதவிகிதம் ஆகும். ஏரிக்கு 460 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக 206 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரியில் இருந்து சோழவரம் ஏரிக்கு தண்ணீர் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சோழவரம் ஏரியில் தற்போது தண்ணீர் முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 1.081 டிஎம்சி. இதில் வெறும் 131 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டிஎம்சி. இதில் 924 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் விநாடிக்கு 595 கன அடி வீதம் சென்று கொண்டிருக்கிறது. இங்கிருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு விநாடிக்கு 821 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *