யூடியூப் சேனல்களுக்குச் சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!

Published On:

| By Balaji

ஆபாசமாக பேட்டி எடுத்து அவற்றை யூடியூபில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பார்த்தவர்கள், பகிர்ந்தவர்களின் பட்டியலைத் தயாரித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி தலைமையிலான போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில், சில யூடியூப் சேனல்கள் பொதுமக்களிடம், குறிப்பாகப் பொதுவெளியில் காதலர்கள் மற்றும் இளம் பெண்களிடம் பேட்டி எடுத்து அதை வெளியிடுவது அதிகரித்து வந்தது.

இந்நிலையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பெண்களிடம் ப்ராங்க் ஷோ என்கிற பெயரில் ஆபாசமாகக் கேள்வி எழுப்பி பேட்டி எடுத்த தொகுப்பாளர் மற்றும் கேமராமேனை அங்கிருந்த பெண்கள் கண்டித்துள்ளனர்.

இதுகுறித்து பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனலின் தொகுப்பாளர் அசேன் பாஷா, அஜய் பாபு, சேனல் உரிமையாளர் தினேஷ் குமார் ஆகிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடற்கரையில் தனியாக இருக்கும் பெண்களிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு அதனை மொபைலில் இவர்கள் பதிவு செய்து வைத்திருந்ததும் தெரியவந்தது. எனவே இதுபோன்ற வீடியோக்களை அழிக்கவும், அந்த சேனலை முடக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். “சைபர் பிரிவு போலீஸார் யூடியூப் பக்கங்களைக் கண்காணித்து வருகின்றனர். யூடியூப் சேனல்களில் ஆபாச காணொளிகள் இருப்பதை அனுமதிக்க முடியாது. இதுவரை ஆபாச காணொளிகளை பதிவிட்டு சேனல்கள் நடத்தி வந்தவர்கள், அதனை தாமாக முன்வந்து அழிக்க வேண்டும். எனவே இனியும் ஆபாச காணொளிகளை பேட்டி என்கிற பெயரில் எடுத்து பதிவிடுவதோ அல்லது பதிவிட்டதை அழிக்காமல் வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share