vஎஸ்.பி சஸ்பெண்ட்: தப்பிக்கிறாரா ராஜேஷ் தாஸ்!

Published On:

| By Balaji

செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்ய இந்தியத் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது உடன் சென்றார். அப்போது அவரை வரவேற்க வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியைத் தனது காரில் அழைத்துச் சென்று ராஜேஷ் தாஸ் பாலியல் தொந்தரவு கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்தது.

அதோடு ராஜேஷ் தாஸ் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் தனது அதிரடிப்படையுடன் வந்து, புகார் கொடுக்க சென்ற பெண் எஸ்.பி.யின் காரை மறித்து சாவியைப் பிடுங்கிய விவகாரம் காவல்துறை வட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பெண் எஸ்.பி.யை தடுத்து மிரட்டியது தொடர்பாக எஸ்.பி. கண்ணன் மீது ஐபிசி பிரிவு 354 A (2), 341, மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதவியிலிருந்து சென்னை வணிக குற்றப்பிரிவிற்கு அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்தச்சூழலில் அவரை சஸ்பெண்ட் செய்ய இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. தேர்தல் நெருங்கியுள்ள சமயத்தில் , வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி இவ்வழக்கு தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு அறிக்கையை அனுப்பியது.

இதனை பரிசீலனை செய்த இந்தியத் தேர்தல் ஆணையம், கண்ணன் மீது உடனடி சஸ்பெண்ட் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது. கண்ணன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாகத் தேர்தல் ஆணைய செய்திக் குறிப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் எஸ்.பி இன்று சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், ராஜேஸ் தாஷ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரித்தால் தேர்தல் ஆணையம்தான் பரிந்துரைக்க வேண்டும் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் சிபாரிசு செய்யுமா? அதே வேளையில், தன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க உரிய அழுத்தத்தை ராஜேஷ் தாஸ் கொடுத்துக்கொண்டுக்கிறார் என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமா? எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.

**சிபிஐ விசாரிக்க மனு**

ராஜேஷ் தாஸ் மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி ஓய்வு பெற்ற எஸ்.பி.கே.ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ராஜேஷ் தாஸ் இதுபோன்று வேறு ஒரு பெண் அதிகாரிக்கு காரில் பாலியல் தொல்லை கொடுத்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். இதுபோன்ற குற்றச்சாட்டில் ஈடுபடுவதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயர் அதிகாரி மீதான புகாரை மாநில சிபிசிஐடி விசாரித்தால் மென்மையான அணுகுமுறையைக் கையாள்வார்கள். பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பிக்கு வழக்கைத் திரும்ப பெற அழுத்தம் கொடுக்கப்படும். எனவே வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share