சிமென்ட் விலை உயர்வுக்கான காரணம் குறித்து தென் இந்திய சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து, தென்னிந்திய சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் (சிக்மா) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா பரவலின் இரண்டாவது அலை காலகட்டத்தில் மற்ற அனைத்து தொழில்களையும் போல சிமென்ட் உற்பத்தி தொழிலிலும் கடினமான சூழ்நிலை நிலவுகிறது.
சுமார் 30 முதல் 40 சதவிகித திறன் பயன்பாடு மட்டுமே செயல்பாட்டில் இருக்கிறது. அதேநேரத்தில் இதற்கு முந்தைய ஊரடங்கு காலத்திலும், தற்போதைய காலகட்டத்திலும் எங்களுடைய ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினரின் நலன்களை பாதுகாத்ததோடு, அவர்களுடைய வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை நாங்கள் எடுத்தோம்.
நாங்களும் பிழைக்க வேண்டும், அதேநேரத்தில் மற்ற எல்லா இடுபொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதன் காரணமாக சிமென்ட் விலை உயர்வு என்பது தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. மொத்த கட்டுமான செலவோடு ஒப்பிடுகையில், அதில் சிமென்ட் விலை என்பது சிறிய அளவிலானதுதான் என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
தொழில்துறை அமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பெருந்தொற்று சூழ்ந்துள்ள இந்தக் கடினமான நேரத்தில், பொதுமக்களுக்கு தகுந்த மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க விலையில் சிமென்ட் கிடைக்கச் செய்வோம் என்று உறுதியளிக்கிறோம்.
சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு அதிக சலுகை விலையில் சிமென்ட் கிடைக்கச் செய்வதற்காக சிமென்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தமிழக அரசுடன் இணைந்து செயல்படுகின்றன. வளர்ச்சிக்காக அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் சிமென்ட் தொழிற்சாலைகள் முழுமையாக ஆதரவு அளிக்கும் என்று தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் உறுதி அளிக்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தென் இந்திய சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி சிமென்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
**-ராஜ்**
.�,