சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை தமிழில் தயார் என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு (EIA 2020) அறிக்கைக்கு நாடு முழுவதிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. EIA 2020க்கு எதிராக மீனவர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை [தமிழில் வெளியிட முடியுமா](https://minnambalam.com/public/2020/08/07/44/high-court-ask-eia-Draft-report-in-state-languages) என்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக ஆகஸ்ட் 13ஆம் தேதி மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.
இவ்வழக்கு மீண்டும் இன்று (ஆகஸ்ட் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுசம்பந்தமாக எழுத்துப்பூர்வமான விளக்கத்தைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும். இந்த வரைவு குறித்து பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் தொடரப்பட்டுள்ள வழக்கில் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து எழுத்துப்பூர்வமான விளக்கத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு என வாட்ஸ் அப்பில், ஒரு செய்தி பரவுகிறதே, அது அதிகாரப்பூர்வமானதா எனக் கேள்வி எழுப்பி இதுதொடர்பாகவும் விளக்கமளிக்க உத்தரவிட்டனர். வழக்கை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
**-கவிபிரியா**�,