தமிழகத்தில் பிரபலமான கோயில்களில் ஸ்ரீவில்லிபுத்துார் ஶ்ரீஆண்டாள் கோயிலும் உண்டு. ஆண்டாள் பிரபலம் போல் இங்குள்ள யானையும் பக்தர்கள் மத்தியில் செல்ல பிள்ளையாகவே வளர்ந்தது.
சமீபத்தில் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்க சென்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெண் யானை ஜெயமால்யதாவை யானை பாகன் வினில்குமார், உதவியாளர் சிவபிரசாத், ஆகியோர் தாக்கும் காணொலிக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யானையை தாக்கிய இருவர் மீதும் மேட்டுப்பாளையம் வனத் துறையினர் வழக்குப் பதிவு செய்து தமிழ்நாடு வளர்ப்பு யானை மேலாண்மை மற்றும் பராமரிப்பு விதிகள் கீழ் கைது செய்தனர்.
2011ல் அசாம் மாநில வனத் துறையினரின் அனுமதியுடன் ஜெயமால்யதா யானை ஶ்ரீவில்லிபுத்தூர் கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாக ஆண்டாள் கோயிலின் நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கபட்டு வருகிறது. தற்போது புத்துணர்வு முகாமில் யானை தாக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் அசாம் வனத்துறை தங்களிடம் ஒப்படைக்க கேட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஶ்ரீஆண்டாளை தரிசிக்க கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் நுழைவுவாயில் அருகே நிற்கும் யானையிடம் ஆசி பெற்ற பிறகே கோயிலுக்குள் செல்வார்கள்.ஶ்ரீஆண்டாளுக்கு பூஜை பொருட்கள் வாங்கிவரும் பக்தர்கள் மறக்காமல் யானைக்கு பழம் உணவு வாங்கி கொடுப்பார்கள்.
கோடை வெயில் காலம் என்றாலே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா காலை தினமும் 2 மணி நேரம் ஷவரில் குளித்து பக்தர்களை சந்தோஷப்படுத்தும்.
கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் 2 மணி நேரம் யானையை பாகன்கள் குளிக்க வைப்பார்கள். அப்போது யானை ஆனந்த குளியல் போடும் காட்சி ரசிக்கும்படியானது. இப்படி செல்லப்பிள்ளையாக பார்த்த யானை இப்போது கோயிலில் இல்லாதது பக்தர்கள் மத்தியில்
ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் யானையை அசாம் வனத்துறையினர் கேட்பது பேரதிர்ச்சியாக உள்ளது. இதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, ஆண்டாள் கோயிலுக்கு யானை ஜெயமால்யதா சொந்தம் என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும் என பக்தர்கள் கோரிவருகின்றனர்.
இன்று ஶ்ரீஆண்டாளை தரிசிக்க வந்த பக்தர்கள் யானை ஶ்ரீஆண்டாள் கோயிலுக்கே சொந்தமாகி வரவேண்டும் எனபிரார்த்தனை செய்து யானை பெயரில் சங்கல்பம் செய்து சென்றனர். இது யானை மீது பக்தர்கள் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்துகிறது.யானை மீண்டும் விரைவில் ஆண்டாள் கோயிலுக்கு கண்டிப்பாக வரும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
**-சக்தி பரமசிவன்**
�,”