தர்மபுரி இளவரசன் மரணம் குறித்து விசாரிப்பதற்கு 2013ஆம் ஆண்டு தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலு விசாரணை ஆணைய அறிக்கையை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும் என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தர்மபுரி நத்தம் காலனியைச் சேர்ந்த தலித் இளைஞன் இளவரசன் அதே ஊரைச் சேர்ந்த திவ்யா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அதையொட்டி மிகப்பெரிய கலவரம் நடந்து தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
அந்த சம்பவத்திற்குப் பிறகு இளவரசன் மர்மமான முறையில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் இறந்து கிடந்தார். அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் எனக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது ஆனால் தற்கொலையாக இருப்பதற்கு வாய்ப்பில்லை, அவர் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எழுப்பினர்.
அவரது தந்தையும் இளவரசன் மரணம் குறித்து விசாரணை வேண்டும் என வலியுறுத்தினார் அதனடிப்படையில். அன்றைய முதல்வர் ஜெயலலிதா நீதிபதி சிங்காரவேலு ஆணையம் அமைத்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
சிங்காரவேலு ஆணையம் 5 ஆண்டுகள் விசாரணை செய்து 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு. ஒன்பது மாதங்கள் கடந்த பிறகும் தமிழக அரசு அதை வெளியிடவில்லை. அந்த அறிக்கையின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்க வில்லை. இந்நிலையில் ஆங்கில ஏடான ஃபிரண்ட்லைன் அந்த அறிக்கையின் இறுதிப் பகுதியை வெளியிட்டிருக்கிறது. அதில் இளவரசன் தற்கொலை செய்துகொண்டார் என்று நீதிபதி தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று (ஜூன் 9) அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன்.
” சிங்காரவேலு ஆணையத்தின் முழுமையான அறிக்கையைப் பொதுமக்களுக்கு வெளியிடாமல் தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பதற்குக் காரணம் என்ன ? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே மக்களின் பயத்தைப் போக்கவும் குழப்பத்தை தீர்க்கவும் சிங்காரவேலு ஆணையத்தின் முழுமையான அறிக்கையைக் காலந்தாழ்த்தாமல் தமிழக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். அந்த அறிக்கையின் பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவை என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் திருமாவளவன்.
**
மேலும் படிக்க
**
**
[பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!](https://minnambalam.com/k/2019/06/09/40)
**
**
[ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!](https://minnambalam.com/k/2019/06/09/22)
**
**
[டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!](https://minnambalam.com/k/2019/06/08/73)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
**
[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)
**
�,”