நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் நாராயணனும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர். இவர்களைத் தவிர நாம் தமிழர் கட்சி ராஜநாராயணன் என மொத்தம் 23 பேர் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் நாங்குநேரியில் 113 கிராமங்கள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
தங்கள் சமுதாயத்தில் உள்ள 7 உட்பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர் என்று அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 113 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். களக்காடு, தருவை, நாங்குநேரி பகுதியில் உள்ள மக்கள் ஓட்டுப்போட வரவில்லை. இதனால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்படும் நிலையில் 65 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவே நடைபெறவில்லை என்று உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெருமாள்புரம், தாமரைக்குளம், கடம்பங்குளம் உள்ளிட்ட 4 கிராமங்களில் மக்கள் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பல முறை போராட்டங்களில் ஈடுபட்டும் எங்கள் கோரிக்கைக்கு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே அரசியலுக்கு அப்பாற்பட்டு கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில், ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.
இதனால் பிரச்சினை எதுவும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாங்குநேரியில் காலை 11 மணி நிலவரப்படி 23.89% வாக்குகள் பதிவாகியுள்ளன.
முன்னதாக 113 கிராமங்களில் 50 ஆயிரம் மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பது தவறான முடிவு என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
�,”