சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு விரைவு பேருந்து இன்று அதிகாலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நேற்று மாலை சென்னையில் இருந்து அரசு சொகுசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காலை 4 மணியளவில் பேருந்து வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட ஓட்டுநர் முயற்சி செய்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் சீனிவாசன், நடத்துநர் செல்வராஜ் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். 22 பேர் லேசான காயமடைந்தனர்.
இதுகுறித்து கேள்விபட்ட வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்துக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது சற்று நிம்மதி அளிக்கிறது.
**-வினிதா**