qஉணவு பார்சல் சேவை : சுகாதாரத் துறை அறிவுரை!

Published On:

| By Balaji

உணவகங்களில், கடைகளில் பொருட்களை பார்சல் செய்து கொடுக்கும்போது கவரை எச்சில் தொட்டோ, வாயால் ஊதியோ பிரிக்கக் கூடாது என சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று(ஜூன் 19)வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் அவ்வப்போது கலந்தாலோசித்து தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒருசில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலும் சில செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுதான் வருகிறது. அந்த வகையில்தான் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்காமல், பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உணவக பார்சல் சேவையில் கவர்களின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. கவரை பிரிப்பதற்கு எச்சிலை பயன்படுத்துவது, வாயால் ஊதுவது போன்ற செயல்கள் மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

சமீபத்தில் இது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உணவகங்கள், மளிகை, பேக்கரி கடைகளின் ஊழியர்கள் பொருட்களை பார்சல் செய்யும் போது கவரை கையால் எச்சில் தொட்டுப் பிரித்தல், வாயால் ஊதுதல் போன்ற செயல்களால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது என்பது குறித்து கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தவும், அவர்கள் அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி, பார்சல் செய்யும்போது கவர்களை எச்சில் தொட்டு, வாயால் ஊதி பிரிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை கடை உரிமையாளர்கள் அவர்களுடைய ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கவும், அத்தகைய செயல்பாடுகளில் ஊழியர்கள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்யவும் வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share