டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகையை 30 சதவிகிதம் உயர்த்தி இருப்பதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த வாடகை உயர்வதால் காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 14 லட்சம் லாரிகள் பயன்பாட்டில் உள்ளன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15ஆம் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் லாரிகள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் அதற்குப் பதில், மே 2ஆம் தேதிக்குப் பிறகு காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் பொதுக்குழு மற்றும் ஒருங்கிணைந்த மோட்டார் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று (மார்ச் 4) நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக லாரி வாடகையை நேற்று (மார்ச் 4) நள்ளிரவு முதல் 30 சதவிகிதம் உயர்த்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து லாரி வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.
“டீசல் விலை உயர்வு காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு லாரி வாடகை 25 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. தற்போது 30 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு பொருட்களைக் கொண்டு செல்லும்போது லாரி வாடகையையும் சேர்த்துதான் அந்த பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே லாரி வாடகை உயர்வதால் காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்” என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
வரத்தைப் பொறுத்தே சந்தைகளில் காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இனி காய்கறிகள் அதிகம் வந்தாலும் லாரி வாடகை அதிகமாகி இருப்பதால் அவற்றின் விலை குறைய வாய்ப்பு இல்லை. மேலும் விலை உயர அதிக வாய்ப்பு உள்ளது. மளிகை பொருட்கள் விலையும் உயரும். இதுபோல் கட்டுமான பொருட்கள், மருத்துவப் பொருட்கள் விலையும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே ஏழை, நடுத்தர மக்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்தும்” என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
**-ராஜ்**
�,”