Uகிச்சன் கீர்த்தனா: உளுந்து கீர்

Published On:

| By Balaji

இந்தியாவில் அதிகம் பயிரிடப்படும் – அதிகம் பயன்படுத்தப்படும் பயறு வகை உளுந்து. பஞ்சாபி உணவு வகையில் இந்த உளுந்து கீர் மிகவும் பிரபலம். எளிமையாகச் செய்யக்கூடிய இந்த கீர், பெண்களுக்கான சிறப்பு உணவாகும்.

**என்ன தேவை?**

முழு வெள்ளை உளுந்து – அரை கப்

நாட்டுச் சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன் (தித்திப்பு அதிகம் வேண்டும் எனில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்)

பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

ஜாதிக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

நெய் – சிறிது

பாதாம், முந்திரித் துருவல் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்

காய்ச்சிய பால் – ஒரு கப்

தேங்காய் (சிறுசிறு பல்லாக நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் – 2

குங்குமப்பூ – ஒரு சிட்டிகை (விரும்பினால்)

தண்ணீர் – 2 கப்

**எப்படிச் செய்வது?**

ஒரு பவுலில் உளுந்தை சேர்த்து தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊறவைத்து, பிறகு வடிகட்டி மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு சூடானதும், பாதாம், முந்திரித் துருவலைச் சேர்த்து வறுக்கவும். துருவல் என்பதால் வறுக்காமல் பச்சையாகவும் போடலாம். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். தீயைக் குறைத்து அரைத்த உளுந்தை சேர்த்துக் கிளறவும். பிறகு, ஆறிய பால், ஜாதிக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறி, ஏலக்காயைத் தட்டிப் போடவும். பாதாம், முந்திரி சேர்த்து அடுப்பை அணைக்கவும். நெய்யில் தேங்காய்ப் பல்லை வறுத்து, பனீர் துருவல், குங்குமப்பூ தூவி உளுந்து கீரை சூடாகப் பரிமாறவும். ஃபிரிட்ஜில் வைத்தும் பருகலாம்.

**[நேற்றைய ரெசிப்பி: உளுந்து பிடிகொழுக்கட்டை](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2021/06/28/1/Black-gram-kolukattai)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share