wதொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

Published On:

| By Balaji

வங்கிகளைத் தனியார்மயமாக்குவதைக் கண்டித்து, அகில இந்திய கூட்டமைப்பு சார்பில் வரும் 15, 16ஆம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் அதற்கு முந்தைய நாளான 13ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நான்கு நாட்கள் தொடர்ந்து வங்கிகள் இயங்காது.

வங்கிகளைத் தனியார்மயமாக்குவதைக் கண்டித்து வரும் 15 மற்றும் 16ஆம் தேதி வேலை நிறுத்தம் என்று அகில இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதைக் கண்டித்து, அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய மாநில பொதுச்செயலாளர் மணிமாறன் நிருபர்களிடம், “பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து வரும் மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். மேலும் வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதால் பொதுமக்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை விளக்கிக் கூறும் வகையில் இந்த வேலைநிறுத்தம் அமையும். வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்” என்று கூறினார்.

மேலும், “பொதுத்துறை வங்கிகளின் சிறப்பான கடன் வழங்கு அணுகுமுறையால் வேளாண்மை, சிறு மற்றும் குறு தொழில்கள், சேவை துறை ஆகியவை சிறப்பான வளர்ச்சி கண்டன. மார்ச் 2020 புள்ளிவிவரப்படி பொதுத்துறை வங்கிகளின் மொத்த கடன், வேளாண் மற்றும் வேளாண்சார்ந்த துறைகளுக்கு ரூ.12,39,575 கோடியாகவும், தொழில் துறைக்கு ரூ.32,52,801 கோடியாகவும் இருந்தது. இதில், சிறு குறு தொழில்களுக்கு ரூ.4,37,658 கோடியாகவும், நடுத்தர தொழில்களுக்கு ரூ.1,12,376 கோடியாகவும், பெரும் தொழில்களுக்கு ரூ.26,11,369 கோடியாகவும் இருந்தது.

கோடிக்கணக்கான இளைஞர்களின் உயர்கல்விக் கனவுகளைப் பொதுத்துறை வங்கிகள் நனவாக்கியுள்ளன. கல்விக்கடனாக பொதுத்துறை வங்கிகள் வழங்கியுள்ள தொகை ரூ.79,06 கோடிகளாகும். அதேபோன்று, நலிவடைந்த பிரிவினருக்குப் பொதுத்துறை வங்கிகளின் கடன் உதவி மார்ச் 2020ஆம் ஆண்டில் ரூ.6,83,876 கோடி.

பொதுத்துறை வங்கிகள் வழங்கிய பெருமளவு கடன்களினால் பல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலதிபர்களானார்கள். ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் சாமானிய மக்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்க வேண்டும் என்று அரசு அறிவித்தபோது பொதுத்துறை வங்கிகள் 33.17 கோடி ஜன்தன் கணக்குகளை தொடங்கின. இதில் தனியார் வங்கிகளின் பங்கு வெறும் 1.25 கோடி. எனவே வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டதால் சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். மேலும் வங்கி சேவைகள் அவர்களுக்கு எட்டாக்கனியாக்கி விடும்.

எனவே வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருமுனைக் கூட்டங்கள், வாடிக்கையாளர் சந்திப்புகள், ஆர்ப்பாட்டங்கள், கருப்புப்பட்டை அணிந்து, எதிர்ப்பு முகக்கவசங்கள், சுவரொட்டிகள் பதாகைகள் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். எனவே வங்கிகள் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து நடைபெறும் வேலைநிறுத்தத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

வங்கிகளை தனியார்மயமாக்குவதை கண்டித்து, அகில இந்திய கூட்டமைப்பு சார்பில் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான 13ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நான்கு நாட்கள் தொடர்ந்து வங்கி இயங்காது என்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

**- ராஜ்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share