அந்தமானில் ராணுவ உள்கட்டமைப்புக்காக ரூ.5,650 கோடி செலவிட இந்திய அரசு முடிவுசெய்துள்ளது.
அந்தமான் தீவுக்கூட்டங்களில் ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ரூ.5,650 கோடி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுமார் 10 ஆண்டுக்காலத்திற்கு இந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெறும். இதன்படி கூடுதலான போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ஏவுகணை பேட்டரிகள், ராணுவ வீரர்களை அந்தமான் தீவுகளில் திரட்டி வைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் பேசுகையில், “இத்திட்டத்தை தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் தலைமையிலான பாதுகாப்பு திட்டமிடல் குழு ஏற்கெனவே ஆய்வு செய்துவிட்டது. தொடக்கத்தில் ரூ.10,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது கையிருப்பில் உள்ள நிலத்தில் அதிகளவில் கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அந்தமான் நிகோபார் தீவுக்கூட்டங்களில் மொத்தம் 572 தீவுக்கூட்டங்கள் உள்ளன. இந்தியப் பெருங்கடலில் சீனா தனது ஆதிக்கத்தை பதிவு செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்டை நாடுகளில் துறைமுகங்களை வரிசைகட்டி சீனா அமைத்து வருவது இந்தியாவுக்கு பிரச்சினையாக அமைந்துள்ளது. அந்த துறைமுகங்கள் சீனாவின் கடற்படை சாவடிகளாக மாறிவிடுமோ என்பது இந்திய தரப்பின் அச்சம். அந்தமான் தீவுக்கூட்டங்கள் மலாக்கா நீரிணையின் நுழைவு வாயிலில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் வாயிலாக பயணிக்கும் கப்பல்களில் சுமார் 70 விழுக்காட்டு கப்பல்கள் மலாக்கா நீரிணை வாயிலாகவே பயணிக்கின்றன. ஆதலால் அப்பகுதியில் தனது ஆதிக்கத்தை பதிவு செய்து சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.�,