bஎழுவர் விடுதலை: ஆளுநருக்குக் கடிதம்!

Published On:

| By Balaji

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் 1991ஆம் ஆண்டு முதல் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுவிக்கக் கோரி கோரிக்கை வலுத்து வருகிறது. 7 பேரையும் விடுவிக்கத் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சூழலில் எழுவரையும் உடனடியாக விடுவிக்க ஆளுநருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று (ஜூன் 13) கடிதம் எழுதியுள்ளார். அதில், ”பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் தூக்குத் தண்டனை 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளே அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது, ஆனால், மத்திய அரசின் எதிர்ப்பு காரணமாக அது கைகூடவில்லை.

7 பேர் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள், விளக்கம் கேட்கும் நிகழ்வுகள், அரசியலமைப்பு சட்ட அமர்வின் விசாரணை என நான்கரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி அளித்த தீர்ப்பில் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மாநில ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 9ஆம் தேதி கூடிய தமிழக அமைச்சரவை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161ஆவது பிரிவின்படி அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி தங்களுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், அந்த பரிந்துரை தங்களுக்கு அனுப்பப்பட்டு இன்றுடன் 276 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று வரை அதன்மீது எந்த முடிவையும் தாங்கள் எடுக்காதது வருத்தமளிக்கிறது.

விளையாட சென்ற குழந்தை குறித்த காலத்தில் திரும்பி வராவிட்டால் அக்குழந்தையின் தாய் எவ்வாறு துடித்துப் போவாள் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆனால், இங்கு ஒரு தாய் தமது மகன் எந்த தவறும் செய்யவில்லை என்ற நம்பிக்கையில், ராஜிவ் காந்தி கொலைவழக்கு விசாரணைக்காக 28 ஆண்டுகளுக்கு முன் தமது மகனை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு, இப்போது வரை மகனின் வருகைக்காக வழி மீது விழி வைத்துக் காத்திருக்கிறார். இன்னொரு தாய் சிறையில் பெற்றெடுத்த மகளை வெளிநாட்டில் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டு, இன்று வரை நேரில் சந்தித்துக் கொஞ்சி மகிழ முடியாமல் தவிக்கிறார். இந்த துயரங்களை ஒரு குடும்பத் தலைவராகப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

பேரறிவாளன் போன்றவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை; திரிக்கப்பட்ட வாக்குமூலத்தால் தான் அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்பது பலருக்கும் தெரியும். இருப்பினும், 7 தமிழர்களையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யும்படி யாரும் கோரவில்லை. அவர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனையை விட அதிகமாகச் சிறைவாசம் அனுபவித்து விட்ட நிலையில், கருணை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் என்று தான் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களை மன்றாடுகிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய உரிய ஆணைகளைப் பிறப்பிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த கடிதத்தின் நகல் முதல்வர் பழனிசாமிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share