அயோத்தி தீர்ப்பு தொடர்பாக மத்திய அமைச்சர்கள், பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளனர்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கு சொந்தம் எனவும், அங்கு ராமர் கோயில் கட்டலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு தேசிய அளவில் தலைவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், “இது ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று ரீதியான தீர்ப்பு ஆகும். பொதுமக்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், “அனைவரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கருத்து தெரிவிக்கையில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் வரவேற்க வேண்டும். இது சமூக நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும். இந்த பிரச்சினையில் மேலும் சர்ச்சை நீடிக்கக் கூடாது. அதுதான் எனது வேண்டுகோள்” என்று கூறியுள்ளார்.�,