அரியர் ஆல் பாஸ் விவகாரத்தில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கலை, அறிவியல் ,பொறியியல் படிப்புகளுக்கான அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் செப்டம்பர் 30ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்த அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமம், அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும் எனவும் மாணவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை எனவும் அரியர் தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு முரணானது என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் இன்று (அக்டோபர் 7) நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதுபோன்று அரசின் உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து இந்த வழக்கில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று சில மாணவர்கள் சார்பில் முறையீடு செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
அதோடு, அரியர் தேர்வு ரத்து செய்வதற்கு ஆதரவாக வழக்கு தொடரும் மாணவர்களின் அரியர் எண்ணிக்கை உட்பட பத்தாம் வகுப்பு முதல் அவர்களின் கல்வி விவரங்கள் ஆராயப்படும் என்று எச்சரித்தனர்.
மேலும் சொமாட்டோ ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பொறியியல் படித்த மாணவர்கள் பணியாற்றுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர் பார்க்கலாம் எனவும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து வழக்கை வரும் நவம்பர் 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
**-கவி**�,