�
மருந்து சீட்டு இல்லாமல் குறிப்பிட்ட மாத்திரைகளை விற்பனை செய்தால், மருந்து கடை உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
சென்னை கிழக்கு மண்டல காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மருந்தகங்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “ மைலாப்பூர் பகுதியில் நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடும்போது மதுவுடன் மற்ற நோய்களுக்கான மாத்திரையை கலந்து குடித்திருப்பது தெரியவந்தது.
மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகளை கொடுக்கக் கூடாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதையும் மீறி சில மருந்து கடைகளில் குறிப்பிட்ட சில மாத்திரைகளை மருத்துவர் சீட்டு இல்லாமல் விற்பனை செய்கின்றனர். அதனால்,மருந்து சீட்டு இல்லாமல் மாத்திரைகளை விற்றால் கடை உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதன் மூலம் நடக்கும் குற்றத்திற்கு மருந்தகங்களே பொறுப்பு. குற்றவாளிகளுடன் சேர்ந்து மருந்து கடை ஊழியருக்கும் தண்டனை கிடைக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
**வினிதா**
�,