பொறியியல் மாணவர்களுக்கு மே மாதம் நடைபெறுகிற ஆன்லைன் தேர்வில் அண்ணா பல்கலைக்கழகம் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் கடந்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி வருகிறது. இதுவரை மூன்று முறை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில், முறைகேடுகளை தவிர்ப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளை கொண்டு ஆன்லைன் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு நடத்தியது. அந்த தேர்வு முடிவுகள் வெளியானதில் 70 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி ஒரு லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது[மாணவர்கள்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2021/04/16/28/engineering-students-are-planning-to-protest-against-their-result) மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஆன்லைன் தேர்வில் அந்த முறையை கைவிட்டு, புதிய முறையை அமல்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மே மாதம் நடைபெறுகிற ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் புத்தகத்தையும், இணையதளத்தையும் பயன்படுத்தி தேர்வு எழுதலாம். ஒருவரி கேள்வி பதில் போல் இல்லாமல், விரிவாக பதில் அளிக்கும் வகையிலும், புத்தகத்திலிருந்து நேரடியாக கேள்விகளை கேட்காமல் பாடத்தை புரிந்து கொண்டதின் அடிப்படையில் வினாத்தாள்கள் அமைக்கப்படும். இந்த புதிய முறை தேர்வு இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் நடத்தப்படும். இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டும் பழைய நடைமுறையில் வினாத்தாள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முடிவின் மூலம் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு இருப்பதால், இதற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
**வினிதா**
�,