திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே, விழல்கோட்டகத்தில் சேதம் அடைந்த கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள, விழல்கோட்டகம் கிராமத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விழல்கோட்டகம், வெள்ளக்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் அங்கன்வாடி மைய கட்டடம் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. கட்டடத்தில் சிறு, சிறு விரிசல்கள் தென்படுகின்றன.
மேற்கூரையில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவுக்கு விரிசல்கள் காணப்படுகின்றன. இதனால், மழை காலங்களில் மழைநீர் கட்டடத்தில் கசிவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சேதம் அடைந்த நிலையில் கட்டடம் இருப்பதால் குழந்தைகளின் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். மேலும் இங்கு சுற்றுச்சுவர் இல்லாததும், குழந்தைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருப்பதாக பெற்றோர் கூறுகிறார்கள்.
எனவே, சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டடத்தை சீரமைத்து, சுற்றுச்சுவர் எழுப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரியுள்ளனர்.
**-ராஜ்-**
.