kஉலகில் காற்று அதிகம் மாசடைந்த நகரங்கள்!
உலகில் காற்று அதிகம் மாசடைந்த முதல் ஐந்து நகரங்களைக் கொண்ட பட்டியலில் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி மற்றும் லாகூர் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கழகம் காற்றின் தரம் பற்றிய அளவீடுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, காற்று தர குறியீடு 50க்குக் கீழ் இருப்பது திருப்தியளிக்கக் கூடியது எனத் தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரம் காற்று தர குறியீடு 216ஆக கொண்டுள்ளது. இது அதிக ஆரோக்கியமற்ற சூழலைக் குறிக்கிறது.
இதேபோன்று அந்நாட்டின் மற்றொரு நகரான லாகூர் நகரம் காற்று தர குறியீடு 200ஆக கொண்டுள்ளது. இது ஆரோக்கியமற்ற சூழலை குறிக்கிறது.
அந்நாட்டின் பஞ்சாப் பேரிடர் மேலாண் கழகம் காற்று மாசுபாட்டை குறைக்க 613 செங்கற்சூளைகளுக்கு மற்றும் 2,148 தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்தது. 8,579 வாகனங்களையும் பறிமுதல் செய்தது. சுற்றுச்சூழலை பாதுகாக்க, அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 478 பேரை கைது செய்துள்ளது.
இந்த நிலையில், உலகில் காற்றின் தரம் அதிகம் மோசமடைந்த முதல் ஐந்து நகரங்களின் பட்டியலில் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரம் நான்காவது இடத்திலும், லாகூர் நகரம் ஐந்தாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் வங்காளதேசத்தின் டாக்கா மற்றும் கிர்கிஸ்தானின் பிஷேக் ஆகிய நகரங்களும் உள்ளன.
**ராஜ்**�,