ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

Published On:

| By Balaji

கோவையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்த கடைக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம், பி.என்.பாளையம், அவிநாசி சாலையில் Rolling Dough Cafe எனும் ஐஸ்கிரீம் கடை உள்ளது. இங்கு ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழு ஐஸ்கிரீம் கடையில் ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வின்போது, கடையில் உணவு தயார் செய்யும் இடத்தில் இரண்டு மதுபாட்டில்கள் மற்றும் காலாவாதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

மேலும், உணவை தயாரிப்பவர்கள் உரிய மருத்துவ தகுதி சான்று பெறப்படவில்லை, உணவு தயார் செய்யும் இடத்தில் ஈக்கள் அதிகளவில் காணப்பட்டது, அந்த இடம் சுகாதாரமின்றி இருந்தது, உணவு கையாள்பவர்கள் முறையான முகக்கவசம், தலைஉறை மற்றும் கையுறை அணிந்து பணிபுரியவில்லை என்பது ஆய்வின்போது கண்டறியப்பட்டது.

குறிப்பாக, உணவுப் பாதுகாப்பு துறையின் கீழ் பெறப்பட்ட உரிமம் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்தப்படவில்லை.

சாப்பிடக் கூடிய பொருட்கள் தயாரிக்கும் இடத்தில் உரிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றாத காரணத்தினால் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்தக் கடைக்கு சீல் வைத்தனர். மேலும், கடையின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share