உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதை அதிமுகவின் செயல்பாடுகளும், மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் உறுதி செய்து வருகின்றன.
தேர்தல் நேரம், எந்தெந்த பதவிக்குரிய வாக்குச் சீட்டுகள் என்ன நிறத்தில் இருக்கும் என்பது போன்ற அறிவிப்புகளை மாநில தேர்தல் ஆணையம் நேற்று (நவம்பர் 7) அரசிதழில் வெளியிட்டதை அடுத்து உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மற்ற கட்சிகளும் துரிதப்படுத்தியுள்ளன.
அதிமுக கூட்டணியில் பாமக,. தேமுதிக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்குரிய பங்குகளை அடைவதில் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக மாநகராட்சி. நகராட்சிகளில் தங்களுக்கு எத்தனை வேண்டும் என்பதை ஒவ்வொரு கூட்டணிக் கட்சியும் அதிமுகவுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றன.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர், ஓசூர், நாகர்கோவில், ஆவடி என்று தற்போது 15 மாநகராட்சிகள் இருக்கின்றன.
இவற்றில் 12 மாநகராட்சிகளில் தானே போட்டியிட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. குறிப்பாக சென்னை,. திருச்சி, மதுரை,. நெல்லை, கோவை போன்ற முக்கியமான மாநகராட்சிகளை யாருக்கும் விட்டுக் கொடுப்பதில்லை என்றும் உறுதியோடு இருக்கிறது. அமெரிக்கா புறப்பட்ட துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்துடன் இதுபற்றி நேற்று முன் தினம் ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் விவாதித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இதனால் 12 மாநகராட்சிகளில் அதிமுகவும் மீதி 3 மாநகராட்சிகளை பாமக, தேமுதிக, பாஜக கட்சிகளுக்கு ஆளுக்கு ஒன்று என்று கொடுக்கவும் முடிவெடுத்துள்ளது அதிமுக. இதுபற்றி சம்பந்தப்பட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு தெரியப்படுத்திவிட்டது அதிமுக என்கிறார்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் வட்டாரத்தினர்.
ஆளுக்கு ஒரு மாநகராட்சி என்பதை கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக் கொள்ளுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.�,