பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு விரைவில் செல்வதற்கு பயணிகளுக்கு ஹெலி டாக்ஸி அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுகிறது.
கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் ஒரு காரணமாக இருக்கிறது.மேலும், காற்றும் மிகுந்தளவில் மாசுபாடு அடைகிறது.
எலெக்ட்ரானிக் சிட்டி, ஹெச்.ஏ.எல் விமான நிலையம் ஆகிய இடங்களிலிருந்து பெங்களூர் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்வதற்கு அரசு குளிர்சாதன பேருந்துகள்,அல்லது சொந்த வாகனங்கள், வாடகை கார்களில் செல்ல வேண்டும்.
அதனால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும்,காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் ஹெலி டாக்ஸி பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பெங்களூரில் ஹெலி டாக்ஸி அடுத்த வாரம் முதல் சேவைக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.
பெல் நிறுவனத்தின் 407 வகை ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் 15 நிமிடங்களில் விமான நிலையத்தைச் சென்றடைய முடியும். இதனால், பயண நேரம் இரண்டு மணி நேரமாகக் குறையும்.
‘இதற்காக ‘ஹெலி டாக்ஸி’ என்று அழைக்கப்படும் ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், விமானத்தைத் தேர்வு செய்யலாம், ஏறும் மற்றும் இறங்கும் இடங்களைத் தேர்வு செய்யலாம். அந்த விமானத்தில் எத்தனை இருக்கைகள் உள்ளன என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த சேவை காலை 6.30 மணி முதல் 9.30 மணிவரை ஒரு ஷிப்ட் என்றும் மாலை 3 மணி முதல் 6.15 மணிவரை மற்றொரு ஷிப்ட் என்றும் ஒருநாளைக்கு மூன்று முறை ஹெலி டாக்ஸி இயக்கப்பட உள்ளன. இதில், அதிகபட்சமாக 6 பேர் பயணிக்கலாம். 15 கிலோ வரையிலான பொருட்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. அதை தாண்டும்போது கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.
ஹெலிகாப்டர் டாக்ஸியில் பயணிப்பதற்கு ஒரு நபருக்கு ரூ.4130 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் அதிகமாக இருப்பதால்,இந்த சேவை மக்கள் மத்தியில் எந்தளவுக்கு வரவேற்பு பெறும் என்பது தெரியவில்லை�,