அடுத்த காலாண்டுக்கான சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி, அக்டோபர் – டிசம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதங்களை மத்திய நிதியமைச்சகம் தற்போது மாற்றியமைத்துள்ளது. தேசிய சேமிப்பு பத்திரம், பொது சேமலாப நிதி உள்ளிட்ட பல்வேறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் 0.4 சதவிகிதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் ஐந்தாண்டுக் கால டெபாசிட்களின் வட்டி விகிதம் 7.8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பொது சேமலாப நிதித் திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.6 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல, தேசிய சேமிப்பு பத்திரத் திட்டத்துக்கான வட்டி விகிதமும் 8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் விகாஷ் பத்திர சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.7 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதோடு, அதன் முதிர்வுக் காலம் 118 மாதங்களிலிருந்து 112 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் 0.4 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 8.5 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் முதிர்வு கொண்ட சேமிப்புத் திட்டங்களின் வட்டி 0.3 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது.�,