ரயிலில் பயணம் செய்தபோது திடீரென ஏற்பட்ட பிரசவ வலியால், ஒரு பெண்ணுக்கு ரயில் நிலைய நடைமேடையில் குழந்தை பிறந்துள்ள சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று, மும்பையிலிருந்து லக்னோ நோக்கி செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்டார் காஞ்சனா தேவி. 27 வயதுடைய இவர், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார். அந்த ரயில் புசாவல் ரயில் நிலையத்துக்குச் சென்றபோது, காஞ்சனா தேவிக்குத் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவர் பிரசவ வலியால் துடித்ததைக் கண்டு, அருகிலிருந்த சக பெண் பயணிகள் அவருக்கு உதவி செய்ய முன்வந்தனர். அவரை, ரயில் பெட்டியில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.
அங்கிருந்த டிக்கெட் பரிசோதகரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கிருந்த ஒரு டிக்கெட் பரிசோதகர் ரயில்வே மருத்துவமனைக்கு உடனடியாக அழைப்பு விடுத்தார். அங்கிருந்த லிப்ட் ஒன்றில், கர்ப்பிணி காஞ்சனா தேவியை ஏற்ற பயணிகள் முயற்சித்தனர். அப்போது, நடைமேடையிலேயே அவருக்கு ஆண் குழந்தை குழந்தை பிறந்தது. இதையடுத்து, அவர் உள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தாயும் சேயும் நலமுடன் உள்ளதாக, ரயில்வே அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
�,