கோவையில் அதிமுக கொடிக்கம்பத்தால் விபத்து ஏற்பட்டுப் படுகாயமடைந்த அனுராதா என்ற இளம்பெண்ணுக்கு இடதுகால் அகற்றப்பட்டது. ஆனால் விபத்து நடந்த இடத்தில் அதிமுக கொடிக்கம்பமே இல்லை என்று தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்காநல்லூரைச் சேர்ந்த அனுராதா எனும் ராஜேஸ்வரி கடந்த 11ஆம் தேதி காலை ஸ்கூட்டரில் பணிக்குச் சென்றபோது, கோவை பீளமேடு பகுதியில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார். ராயல் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இடது கால் அகற்றப்பட்டது.
சென்னையில் அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, விபத்தால் கால்களை இழந்த அனுராதாவுக்கு இழப்பீடு வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரு வழக்குகளும் நேற்று (நவம்பர் 22)விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண் கோவையில் நடந்த அந்த சம்பவத்தின் நிகழ்விடத்தில் எந்த கொடிக்கம்பமும் இல்லை என விசாரணையில் தெரியவந்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்துக்கு பிறகு விதிகளை மீறி பேனர்கள் வைக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். அப்போது, அரசியல் கட்சி பேனர் விழுந்து இறப்பவர்களின் குடும்பத்துக்கு அந்த கட்சியிடமே ஏன் நிவாரணம் வசூலிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் வழக்கை ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.�,