நடைபெற்று முடிந்த ரஞ்சிக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் விதர்பா அணி டெல்லி அணியை வீழ்த்தி, கோப்பையைத் தட்டிச் சென்றது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவந்த ரஞ்சிக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி கடந்த டிசம்பர் 29 (2017) ஆம் தேதி தொடங்கியது. முதலில் பேட் செய்த டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 295 ரன்களைச் சேர்த்தது. அதன் தொடர்ச்சியாக விளையாடிய விதர்பா அணி நிலைத்து நின்று விளையாடி முதல் இன்னிங்ஸ் முடிவில் 547 ரன்களைச் சேர்த்தது. பின்னர் 252 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய டெல்லி அணி, விதர்பா அணியின் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது.
எனவே, டெல்லி அணியில் விளையாடிவரும் இந்திய அணி வீரர் கவுதம் காம்பீர் நிலைத்து நின்று விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அவர் 36 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய துருவ் ஷோரே (62) மற்றும் நிதிஷ் ராணா (64) இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின்னர் டெல்லி அணி மீண்டும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. டெல்லி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 280 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய விதர்பா அணி வீரர்கள் எளிதாக அந்த ஸ்கோரை அடித்து அணியை வெற்றிபெற செய்தனர். முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த விதர்பா அணி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளது. அரையிறுதியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய விதர்பா அணி வீரர் ரஜினீஸ் குர்பானி, இறுதிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடி ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார்.
�,”