wபிரதமருக்கு எலும்புக்கூடு: விவசாயிகள் கைது!

Published On:

| By Balaji

தமிழகத்தில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி, பிரதமருக்கு எலும்பு கூடு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேளாண் துறை தொடர்பாக கடந்தாண்டு செப்டம்பர் 20 மற்றும் 22ஆம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் செப்டம்பர் 27ஆம் தேதி ஒப்புதல் அளித்ததும் அவை சட்ட வடிவத்தைப் பெற்றன. இந்த சட்டங்களை திரும்ப பெறக் கோரி தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் இன்று 100ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த நாளை கருப்பு நாளாக அனுசரிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், போராட்டத்துக்கு ஆதரவு தரும் வகையில் மக்கள் தங்கள் வீடுகளில், அலுவலகங்களில் கருப்பு கொடிகளை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தின் எதிரே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, 100 நாட்களாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து உரிய தீர்வு காண வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இந்த வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு அழிவுதான். சந்ததிகளே இல்லாமல் இந்தியாவையும் தமிழகத்தையும் அழிக்க நினைக்கும் மோடியின் செயலை கண்டித்து இந்த எலும்புக் கூடுகளையும் மண்டை ஓடுகளையும் பார்சலில் அனுப்பி வைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதை போலீசார் தடுக்க முயன்றபோது, தரையில் படுத்து போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டம் தொடர்ந்ததால், விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் 50க்கு மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதுபோன்று விவசாயிகளுக்கு ஆதரவாக, நெல்லை, வேலூர் , ராணிபேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share