இன்று ஒரே நாளில் 9 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.
உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமனும், நவீன் சின்காவும் ஓய்வு பெற்றதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 24 ஆக குறைந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக 3 பெண்கள் உட்பட 9 புதிய நீதிபதிகளை நியமிக்கும்படி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் கடந்த 17ஆம் தேதி ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது.
சமீபத்தில், இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து, புதிய ஒன்பது நீதிபதிகளும் இன்று(ஆகஸ்ட் 31) நீதிமன்றத்தின் கூடுதல் கட்டிட வளாகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவி ஏற்றுக் கொண்டனர்.
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஸ்ரீநிவாஸ் ஒகா, குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்தனா, கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா, ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே ஒரே நாளில் ஒன்பது நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொள்வது இதுவே முதல்முறையாகும். இதன்மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட 3 பெண் நீதிபதிகளில் ஒருவரான பி.வி.நாகரத்தனா,சீனியாரிட்டி அடிப்படையில் வரும் 2027ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளது. அதன்மூலம் நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை பெறுவார். அதுபோன்று, நீதிபதி நாகரத்னாவைத் தவிர, மேலும் நீதிபதிகள் விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்ஹா ஆகிய இருவரும் சீனியாரிட்டி நிலைக்கு ஏற்ப இந்தியாவின் தலைமை நீதிபதியாகவும் வாய்ப்பு உள்ளது.
**-வினிதா**
�,