தமிழகத்தில் கூடுதல் நீட் தேர்வு மையங்களை அமைக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள், தேசிய தேர்வு வாரியம், தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2021-22ஆம் கல்வியாண்டில், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு வாரியம், பிப்ரவரி 23ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதில், பிப்ரவரி 23 முதல் மார்ச் 15 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், ஏப்ரல் 18ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதற்காக நாடு முழுவதும் 255 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது.
தமிழ்நாட்டில் 28 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் பெறத் தொடங்கிய சில மணி நேரங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி தேர்வு மையங்கள் நிரம்பிவிட்டதாகக் கூறி, இந்தத் தேர்வு மையங்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களிலிருந்து நீக்கப்பட்டன.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரபிள்ளை ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 15 ஆம் தேதி வரை அவகாசம் உள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரியில் தேர்வு மையங்கள் நிரம்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் வெளி மாநில தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களால் தேர்வில் கவனம் செலுத்த முடியாத நிலையும் ஏற்படும். மாணவர்களுக்கு தேர்வு மையங்களை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதனால், தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று நீதிபதிகள் சுப்பையா, சத்திகுமார் சுகுமார குரூப் அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த மனுவுக்கு மத்திய மாநில சுகாதாரத் துறை செயலாளர்களும், தேசிய தேர்வு வாரியமும், தேசிய மருத்துவ ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் இவ்வழக்கு விசாரணையை மார்ச் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்..
**வினிதா**
�,