மும்பை சிறையில் இடப்பற்றாக்குறை காரணமாக விரைவில் அடுக்கு மாடி கொண்ட புதிய சிறையைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் தற்போது விசாரணை கைதிகளை அடைக்க ஆர்தர் ரோடு சிறை மட்டுமே இருக்கிறது. இந்தச் சிறையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு இந்தச் சிறையில் கைதிகளை அடைக்க முடியாது. அதேசமயம் இந்தச் சிறையை விரிவுபடுத்தவும் முடியாது.
மும்பை நகருக்குள் வேறு ஒரு சிறை கட்டும் திட்டம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது. ஏற்கனவே நகருக்கு வெளியே அருகில் உள்ள சாட்டிலைட் நகரமான நவிமும்பை தலோஜாவில் புதிய சிறை கட்டப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்தச் சிறையில் இருந்து விசாரணை கைதிகளை மும்பை நீதிமன்றத்துக்கு அழைத்து வர அதிக நேரமாகிறது. அதோடு பாதுகாப்பு பிரச்சினையும் இருக்கிறது.
எனவே மும்பைக்குள் புதிதாக ஒரு சிறை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இதற்கு முன்பிருந்த மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இதற்கு ஒப்புதல் கொடுத்திருந்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் இருப்பது போன்று பல அடுக்குகள் கொண்ட சிறையைக் கட்ட மாநில சிறைத்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள மாநில சிறைத்துறை அதிகாரி சுனில் ரமானந்த், “புதிய சிறை 5,000 கைதிகளை அடைக்கும் வகையில் உருவாக்கப்படும். அனில் தேஷ்முக் உள்துறை அமைச்சராக இருந்தபோதே இதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார். தற்போது மும்பையில் இருக்கும் சிறையை விரிவுபடுத்த முடியாத நிலை இருக்கிறது. அதேநேரம் புதிய சிறை உடனடியாகத் தேவைப்படுகிறது. அதற்கு நிலம் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. எனவே புதிய சிறையை பல மாடிகள் கொண்டதாகக் கட்ட முடிவு செய்திருக்கிறோம். அதற்கான நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது. பால்கர், புனே, ஹின்கோலி, கோண்டியா போன்ற பகுதியிலும் புதிய சிறை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் விஐபிக்களை அடைக்க பிரத்யேக சிறை அறைகள் கட்டப்பட்டுள்ளன. தொழிலதிபர் விஜய் மல்லையா, நீரவ்மோடி போன்றோர் இந்தியாவுக்கு நாடு கடப்பட்டுக்கொண்டு வந்தால் அவர்களை அடைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
**ராஜ்**
.�,