சத்தியமங்கலம் சரணாலயம்: இரவுநேர போக்குவரத்துக்குத் தடை!

Published On:

| By admin

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வனவிலங்குகள் நல ஆர்வலரும், வழக்கறிஞருமான சொக்கலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ”கடந்த 2013ஆம் ஆண்டு சத்தியமங்கலம் விலங்குகள் சரணாலயம் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்த சரணாலயத்தில் புலிகள் மட்டுமல்லாமல், சிறுத்தை, யானை, மான், காட்டெருமை போன்ற விலங்குகளும் உள்ளன. சரணாலயத்தின் வழியே பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி வனவிலங்குகள் பலியாகின்றன.
24 மணி நேரமும் கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் என ஒரு நாளைக்கு 5000 வாகனங்கள் வரை இந்த சாலையில் செல்கின்றன. கடந்த 2012 முதல் 2021ஆம் ஆண்டு வரை 8 சிறுத்தை, ஒரு யானை, 71 மான்கள், 55 மயில்கள் என 155 வன விலங்குகள் வாகனங்கள் மோதி பலியாகியுள்ளன. அதனால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பிற வாகனங்கள் போக்குவரத்துக்கும் தடை விதிக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று(பிப்ரவரி 8) பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வனத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்தச் சாலையில் வாகன போக்குவரத்துக்குத் தடைவிதித்து 2019இல் ஈரோடு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்கள் எதிர்ப்பு காரணமாக நடைமுறைப்படுத்தவில்லை. ஏற்கனவே இது சம்பந்தமான வழக்கில் உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்டவர்களுடன் கூட்டம் நடத்தி சுமுகத் தீர்வு காண உத்தரவிட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றாலும், உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். அதை மீறுவோரின் பெயர் பட்டியலை அளிக்க வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் ஏற்பட்ட விலங்குகளின் மரணத்திற்கு வனத் துறை அலுவலர்களை ஏன் பொறுப்பாக்கக் கூடாது? உத்தரவை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றால் ஊதியம் எதற்கு? எனக் கேள்வி எழுப்பினர்.
வனத் துறையினர், வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாக்கவே நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய நீதிபதிகள், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்குத் தடைவிதித்த உத்தரவை நாளை மறுநாள் (பிப்ரவரி 10) முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், இதுவரை இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் இருந்ததற்கு வனத் துறை விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையடுத்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை மக்கள் கருத்து கேட்புக்கூட்டம் நடத்தப்பட்டு அங்கு மக்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவுக்கு அப்பகுதி மக்களும், வாகன் ஓட்டிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share