yரூ.80 லட்சம் பரிசு: போலீஸாரிடம் சென்ற தொழிலாளி!

Published On:

| By Balaji

திருவனந்தபுரம் அருகே மேற்கு வங்க தொழிலாளிக்கு லாட்டரியில் பம்பர் பரிசான ரூ.80 லட்சம் கிடைத்துள்ள நிலையில் திருட்டு பயத்தால் போலீஸாரிடம் உதவி கேட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதீபா மண்டல். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள மருதங்குழி பகுதியில் தங்கியிருந்து கட்டட தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருடைய குடும்பத்தினர் மேற்கு வங்கத்திலேயே உள்ளனர். பிரதீபா மண்டல் மட்டும் கேரளாவில் தங்கியிருந்து வேலை பார்த்தார்.

பிரதீபா மண்டலுக்கு லாட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கேரள அரசின் காருண்ய பாக்கிய குறி லாட்டரி வாங்கினார். அதில் அவருக்கு பம்பர் பரிசான ரூ.80 லட்சம் விழுந்தது.

இதையறிந்த பிரதீபா மண்டல் மகிழ்ச்சி அடைந்த அதேவேளையில் பெரிய தொகை தனக்குப் பரிசாக விழுந்ததால் அவருக்கு பயமும் ஏற்பட்டது. அதை யாராவது பறித்துச்சென்று விடுவார்கள் என்று கருதிய அவர், பூஜப்புரா போலீஸ் நிலையத்துக்குச் சென்றார். தனக்கும், தனக்கு பரிசு விழுந்த லாட்டரி சீட்டுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அவர் கூறுவது உண்மை தானா என்று சம்பந்தப்பட்ட லாட்டரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது பிரதீபா மண்டலுக்கு லாட்டரியில் ரூ.80 லட்சம் விழுந்துள்ளதை உறுதி செய்தனர். இதையடுத்து பிரதீபா மண்டலுக்கு விழுந்த லாட்டரி சீட்டு தொகையை வங்கியில் டெபாசிட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், பிரதீபா மண்டலுக்கு நிரந்தரமாக வீடு இல்லாததால் முகவரி எதுவும் இல்லை. வங்கியில் சேமிப்புக் கணக்கும் இல்லை. இதனால் அவருக்கு விழுந்த பரிசுத்தொகையை வங்கியில் டெபாசிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதுபற்றி வங்கி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

பிரதீபா மண்டலுக்கு விழுந்த லாட்டரி சீட்டையும், அவரையும் போலீஸார் தங்களது வாகனத்தில் பாதுகாப்புடன் வங்கிக்கு அழைத்து சென்றனர். வங்கியில் பிரதீபா மண்டலுக்கு தற்காலிகமாக ஒரு முகவரியில் வங்கியில் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்பு அவரது லாட்டரி சீட்டு வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. லாட்டரியில் ரூ.80 லட்சம் விழுந்தது குறித்து பிரதீபா மண்டல், “மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பரிசு விழுந்த லாட்டரி சீட்டை யாராவது பறித்துச்சென்று விடுவார்கள் என்று கருதியதால் போலீஸ் நிலையத்துக்குச் சென்று பாதுகாப்பு கேட்டேன். அவர்களின் பாதுகாப்புடன் பரிசுத் தொகையை வங்கிக்குக் கொண்டு சென்றேன். இந்த பரிசுத் தொகையில் புதிய வீடு கட்டுவேன். புதிய கார் வாங்குவேன்” என்று கூறியுள்ளார்.

** – ராஜ்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share