பிறப்பு சான்றிதழ் வாங்க வந்தபோது கோவை அரசு ஆஸ்பத்திரியில் எட்டு மாத ஆண் குழந்தையைக் கடத்திய தம்பதியை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள இலங்கை அகதி முகாமைச் சேர்ந்தவர் செல்வம், வயது 30 . கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை சேர்ந்தவர் வயது 28 செல்வராணி. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு திருப்பூர் சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் கிடைத்த வேலைகளை செய்துவிட்டு ரெயில்வே நடைபாதையில் கூடாரம் அமைத்து வசித்து வந்தனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த செல்வராணிக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
இதைத்தொடர்ந்து செல்வம் நடைபாதையில் வசிக்காமல் குறைந்த வாடகையில் வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக செல்வத்துக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர், வேலைதேடி கடந்த 10ஆம் தேதி கோவை ரெயில் நிலையம் அருகே வந்தார். அப்போது கோவையில் வேலைக்குச் செல்வதற்காக காத்திருந்த திருப்பூரை சேர்ந்த வயது 35 விக்னேஷ் – அவருடைய மனைவி வயது 30 பிரபாவதி ஆகியோர் அறிமுகம் செல்வத்துக்கு கிடைத்தது.
இந்த நிலையில் இரட்டை குழந்தைகளுக்குப் பிறப்பு சான்றிதழ் வாங்க நேற்று முன்தினம் செல்வம் தனது மனைவி செல்வராணியுடன் குழந்தைகளை எடுத்துக்கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது உதவிக்காக விக்னேஷ் – பிரபாவதி தம்பதியும் உடன் வந்தனர்.
பின்னர் அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்ததும், அங்குள்ள இருப்பிட மருத்துவ அதிகாரி அலுவலகம் அருகே அமர்ந்து இருந்தனர். பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக செல்வம் தனது ஆதார் கார்டை ஜெராக்ஸ் எடுக்க சென்றார். அப்போது ஒரு குழந்தையை செல்வராணியும், மற்றொரு குழந்தையை பிரபாவதியும் வைத்திருந்தனர். பிரபாவதி அந்தக் குழந்தையை கையில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தார்.
குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் குழந்தைகளின் எடைஅளவு எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டும். எனவே தான் வைத்திருக்கும் குழந்தையின் எடையைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறியவாறு பிரபாவதி மற்றும் விக்னேஷ் ஆகியோர் ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.
பின்னர் நீண்ட நேரமாகியும் குழந்தையுடன் சென்ற அவர்கள் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் மற்றும் செல்வராணி ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் குழந்தை மற்றும் அவர்களை காணவில்லை. குழந்தையை அவர்கள் கடத்திச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து குழந்தையின் பெற்றோர் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
தனிப்படை அமைத்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வைத்து குழந்தையைக் கடத்திச் சென்ற விக்னேஷ் – பிரபாவதி ஆகிய இருவரை பிடித்து, குழந்தையையும் மீட்டனர்.
இதுகுறித்து விசாரித்த போலீஸார், “செல்வம் – செல்வராணி தம்பதியரை பின்தொடர்ந்த விக்னேஷ் – பிரபாவதி தம்பதி, அவர்களிடம் பேசிப் பழகியுள்ளனர். நாளடைவில் செல்வம் தம்பதிக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களது வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளனர். பிறப்புச் சான்றிதழ் வாங்க, செல்வம் தம்பதியுடன் விக்னேஷ் தம்பதியும் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுக்க வேண்டுமென செல்வத்தை, விக்னேஷ் வெளியில் அழைத்துச் சென்றுவிட்டார். அதனால், பிரபாவதியும் செல்வராணியும் கையில் ஆளுக்கு ஒரு குழந்தையுடன் இருந்துள்ளனர். சிறிது நேரத்தில் பிரபாவதி குழந்தையுடன் மாயமாகிவிட, ஜெராக்ஸ் கடையில் இருந்து போன் பேசுவது போலவே விக்னேஷ் எஸ்கேப் ஆகிவிட்டார். செல்வம் உள்ளே சென்று, `குழந்தை எங்கே?’ என்று கேட்டபோதுதான், குழந்தை கடத்தப்பட்ட விஷயம் அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.
அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தோம். நேற்று (ஜூன் 13) மாலை திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வைத்து விக்னேஷ் தம்பதியைப் பிடித்துவிட்டோம். குழந்தையையும் மீட்டு செல்வம் தம்பதியிடம் ஒப்படைத்துவிட்டோம்” என்றனர்.
விக்னேஷ் – பிரபாவதியைக் கைது செய்த போலீஸார், இதில் இன்னும் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, இவர்கள் குழந்தை கடத்தல் கும்பல்களுடன் தொடர்பில் இருப்பவர்களா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக குழந்தையைக் கடத்தினார்களா? போன்ற பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர்.
கைதான தம்பதி போலீஸில் கொடுத்த வாக்குமூலத்தில், “எங்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மன விரக்தியில் இருந்து வந்தோம். செல்வத்திடம் கிடைத்த நட்பு மூலம் கடந்த 10ஆம் தேதி அவருடைய திருப்பூர் வீட்டுக்குச் சென்றோம். அங்கு அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் இருப்பதை பார்த்து பொறாமைப்பட்டோம்.
அப்போது அதில் ஒரு குழந்தையை எப்படியாவது நாங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டோம். இதுதொடர்பாக அவரிடம் கேட்கலாம் என்று நினைத்து இருந்தோம். ஆனால் அவர்கள் சம்மதம் தெரிவிப்பார்களா என்பது தெரியாததால் அந்த குழந்தையை கடத்தி விடலாம் என்று எண்ணினோம்.
இந்த நிலையில்தான் அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு இரு குழந்தைகளையும் எடுத்துக்கொண்டு சான்றிதழ் வாங்குவதற்காக புறப்பட்டனர். நாங்களும் அவர்களுக்கு உதவுவதுபோன்று அவர்களுடன் சென்று, அதில் ஒரு குழந்தையை கடத்திச்சென்று நாங்கள் வளர்க்கலாம் என்று நினைத்துதான் அந்த குழந்தையை கடத்தினோம். பின்னர் திருப்பூரில் வந்து பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியூர் செல்ல திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையில் இறங்கினோம். ஆனால் அதற்குள் போலீசார் எங்களை பிடித்து விட்டனர்” என்று அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.
கடத்தப்பட்ட 24 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட கோவை போலீஸாருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
**-ராஜ்**
�,”